Monday, 24 November 2014

விளையாடத் தடை ஏது ?

விளையாடத் தடை ஏது ?

  •  
     
  •  
     
பள்ளியிலும், கல்லூரியிலும் விளையாடி எக்கச்சக்கமாகப் பரிசுகள் குவித்திருக்கிறேன். விளையாட்டுதான் என் உயிர் மூச்சு. இந்தியாவுக்காக விளையாடிப் புகழடைவதுதான் என் கனவு. 

ஆனால் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சூழல் சாதகமாக இருக்க வேண்டாமா? என ஏக்கத்தோடு கூறும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியது நடிகை, ஸ்டண்டு கலைஞர், நடனக் கலைஞர், ஓவியர், திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர் எனப் பல அவதாரங்கள் எடுத்த லெனி ரைபென்ஸ்தாலலின் வாழ்க்கை. அதெப்படி ஒருவர் இத்தனை ரூபங்கள் எடுக்கமுடியும் என ஆச்சரியமாக இருக்கலாம். அவருடைய ஒவ்வோர் அவதாரத்துக்குப் பின்னால் இருப்பது அனுகூலமான சூழலோ, கதவைத் தட்டிய வாய்ப்புகளோ அல்ல. எப்படித்தான் அவர் அவ்வளவு சாதித்தார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

நடன தாரகை 

சினிமா பிறந்து 7 வருடங்கள் கழித்து 1902-ல் பெர்லினில் பிறந்தார் லெனி ரைபென்ஸ்தால். இளம்பிராயத்தில் நடனமும், ஓவியமும் கற்றுக் கொண்டிருந்த லெனிக்குப் பிரபல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தன. பிரபலமடைந்து வரும் காலத்தில் ஒரு விபத்தில் முழங்காலில் அடிபட நடன வாழ்வு முடிந்து போனது. காலில் வலியையும் மீறித் திரைப்படம் ஈர்க்க, ஒரு நாள் ஒரு தியேட்டருக்குள் நுழைந்தார். லெனி பார்த்த திரைப்படத்தில் பிரம்மாண்டமான பனி மலையில் மலை ஏற்றம், பனிச்சறுக்கு எனப் பல சாகசக் காட்சிகள் காட்டப்பட்டன. லெனி அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் மலை ஏறும் நிபுணரான அர்னால்ட் பான்க்கினை உடனடியாகத் தேடிச் சந்தித்து நடிக்க விருப்பம் தெரிவித்தார். 

சாகச நடிகர் 

அடுத்த நொடி முதல் மலை ஏற்றம், பனிச்சறுக்கில் பயிற்சி பெறத் தொடங்கினார். 1926-ல் ‘தி ஹோலி மவுண்டன்’ என்ற படத்தின் மூலம் சாகச கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சாகசப் படங்களில் நடித்து ஜெர்மனியின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார். ஒரு கட்டத்தில் திரைப்படம் இயக்க வேண்டும் என்ற கனவு தோன்றவே 1932-ல் ‘புளூ லைட்’ என்ற படத்தைத் தானே தயாரித்து, இயக்கி, நடித்தார்.

செலுலாய்ட் சிற்பி 

அந்தக் காலகட்டத்தில் ஜெர்மனியை உலகின் முதன்மையான நாடாக மாற்ற வேண்டும் என மக்களிடம் வீர உரை நிகழ்த்தி வந்தார் ஹிட்லர். அவரால் ஈர்க்கப்பட்ட பலரில் லெனியும் ஒருவர். 1933-ல் ஆட்சிக்கு வந்தவுடன், கட்சிப் பிரச்சாரப் படங்களை லெனியைத் தயாரிக்கச் சொன்னார் ஹிட்லர். 1934-ல்
நியூரம்பர்க்கில் நடத்தப்பட்ட நாஜி கட்சி மாநாட்டைப் படமெடுத்தார் லெனி. அப்படி உருவானதுதான், இன்று வரை உலக அரங்கில் பேசப்படும் ஆவணப் படமான “டிரயம்ப் ஆஃப் தி வில்”. அடுத்து 1936-ல் அறுபதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவுக் கலைஞர்களை வைத்து லெனி படைத்த செலுலாய்ட் கவிதை பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. ஹிட்லரின் சுயரூபம் அறிந்த பின்னர் இனி அவருக்குத் துணை போவதில்லை என முடிவெடுத்தார் லெனி.

அடிக்கு மேல் அடி
 
ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் தோல்வியடைந்த பிறகு, லெனி ஹிட்லரின் ஆதரவாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய சொந்த வீடு, படமெடுக்கும் கருவிகள் என அனைத்தும் பிரெஞ்சு அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. சில நாட்கள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பின் தாயுடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். 1953- ல் அவரது காமிரா, எடிட்டிங் கருவிகள் திருப்பித் தரப்பட்டன. மீண்டும் படம் எடுக்கத் தொடங்கிய போது, ஒரு கார் விபத்தில் படு காயமடைந்தார். திரைப்படம் எடுக்க லெனி எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்தன. ஆனால் 
சோர்வடையவில்லை லெனி. புகைப்படக் கலைக்குத் திரும்பினார். 

வன வாசம்
 
ஒரு முறை சூடான் நாட்டுக்குச் சென்று அங்கு வாழும் நூபா பழங்குடி மக்களைச் சந்தித்த பின் அவர்களுடனே தங்கிவிட்டார். இயற்கையோடு இணைந்திருந்த நூபிய மக்களின் வாழ்வைப் புகைப்படங்கள் எடுத்து 1972 முதல் புத்தகங்களாக வெளியிடத் தொடங்கினார். அவரைப் பாராட்டி சூடான் அரசு அவருக்குக் குடியுரிமை அளித்துக் கவுரவித்தது. மீண்டும் புகழின் உச்சிக்குப் போனார் லெனி. 

கடலுக்குள் காமிரா
 
71-வது வயதில் ஆழ்கடல் மூழ்கும் பயிற்சி பெற்ற லெனி கடலின் அற்புதங்களைப் படமெடுக்கத் தொடங்கினார். 2003-ல் ‘வண்டர்ஸ் அண்டர் வாட்டர்’ என்னும் அவரது ஆழ்கடல் ஆவணப் படம் வெளிவந்தது.

செத்துப் பிழைத்தவர் 

98 வயதில் தன் நூபா பழங்குடி தோழர்களை மீண்டும் காணலாம் என சூடானுக்குச் சென்றபோது, ஹெலிகாப்டர் விபத்தில் அவரது உடல் உருக்குலைந்தது. ஆனால் மீண்டும் செத்துப் பிழைத்து எழுந்தார் லெனி. விட்டதா விதி? அவரது 100-வது வயதில் நாஜி பிரச்சினை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த முறை விடுவிக்கப்பட்டபோது லெனியின் உடல் நிலை மோசமாகியது. 2003-ல் 101-வது பிறந்த நாளைக் கொண்டாடிய சில வாரங்களில் அவர் மரணமடைந்தார். 

பல முறை விழுந்தவர், வீழ்த்தப்பட்டவர் லெனி. ஆனால் ஒரு முறைகூட சாய்ந்துவிடவில்லை, ஓய்ந்துவிடவில்லை. ஒவ்வொரு முறை தாக்கப்பட்ட போதும் அவர் வேகம் இன்னும் பல மடங்கு கூடியிருக்கிறது. தன்னைப் பார்த்து வீசப்பட்ட அத்தனை தடைக் கற்களையும் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்ட லெனி என்னும் போராளியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. உடல் ரீதியான அறிவுத்திறனுக்கும் மன வலிமைக்கும் இவரைக் காட்டிலும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா என்ன?

 

Tuesday, 11 November 2014

தலைவர் ஆவது எப்படி?

தலைவர் ஆவது எப்படி?

 

குறிக்கோள் உள்ளவர்தான் தலைவர். குறிக்கோளை அடைய தகுதிகளை இடையறாது வளர்த்துக் கொண்டு பாடுபடுபவரே தலைவர். எந்த அமைப்பில் அவர் பணிபுரிகிறாரோ அந்த அமைப்பின் முன்னேற்றத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்பவரே தலைவர். 

கூட்டுச் செயல்பாடு
 
அவர் குழுவாக இயங்குவார். காலம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, தன் துறையில் ஏற்படும் நவீனமான மாற்றங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுவார். 

தன்னுடைய குழுவில் அனுபவம் வாய்ந்த முதியோர்களும் வேகத் துடிப்பு உள்ள இளைஞர்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்வார். ஒரு நிறுவனத்திற்கு இருவருமே தேவை. எல்லோருடைய திறமைகளையும் அமைப்பின் முன்னேற்றத்திற்குத் தலைவர் பயன்படுத்திக் கொள்வார். 

திறமையை அங்கீரித்தல்
 
ஒவ்வொருவரது திறமையையும் சரியாக மதிப்பீடு செய்யத் தெரிந்தவராகவும் அவரது திறமைக்கேற்ற பணியை அவரிடம் கொடுப்பவராகவும் இருப்பார்.குழுவில் உள்ள மற்றவர்களது திறமையை அங்கீகரிக்கத் தெரிந்தவராக இருப்பார்.நிறுவனத்தின் சாதனைகளுக்குக் காரணமாகத் தன்னையும் தோல்விகளுக்குக் காரணமாக மற்றவர்களையும் முன்னிறுத்த மாட்டார். மற்றவர்களின் சாதனையைப் பெருந்தன்மையுடன் பாராட்டுபவராக இருப்பார். தன்னுடைய முகத்திற்கு முன் முகஸ்துதி செய்பவர் முதுகுக்குப் பின் அவதூறு செய்பவராக இருப்பார் என்பதைப் புரிந்து வைத்திருப்பார். 

இணக்கமான உறவு 

மற்றவர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார். கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மாணவர்களைப் பார்த்து சிரிக்கவே மாட்டார். சிரித்தால் மாணவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று அவராகக் கற்பனை செய்துகொள்வார். இறுதியில் பிரிவுபசாரக் கூட்டத்தில் மாணவர்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். நீங்கள் சிரித்தே பார்த்ததில்லை, சார், ஒரே ஒரு முறை சிரிங்க சார்.. நாங்க பாக்கணும் என்று கேட்டுவிட்டார்கள் ! 

முடிவும் முயற்சியும்
 
யாருடன் கலந்துகொள்ள வேண்டுமோ அவர்களுடன் கலந்துகொண்டு முடிவெடுக்கும் திறன் ஒரு தலைவருக்கு முக்கியமானது. அவர் முடிவெடுக்கும்போது, அதில் வறட்டுத்தனம் 
இருக்காது.நெகிழ்வுத்தன்மையுடன் பரிசீலித்து சரியான முடிவை எடுப்பார்.
மற்றவர்கள் பேசும்போது அவசரப்பட்டுக் குறுக்கிடாமல் கவனமாகக் காது கொடுத்துக் கேட்பார். தனது கருத்தை இறுதியாகக் கூறுவார். இப்படி மனம் விட்டு விவாதித்து எடுத்த முடிவில் உறுதியாக நிற்பார். அதனால் ஏற்படும் சோதனைகளைத் துணிவுடன் சந்திப்பார்.
பின்னர் ஏற்படும் அனுபவ வெளிச்சத்தில், முடிவில் ஒரு மாற்றம் தேவை எனக் கருதினால் மறுபடியும் மற்றவர்களுடன் கலந்துகொண்டு முடிவை மாற்றுவார். முடிவை மாற்றவே கூடாது என்று பிடிவாதமாக இருக்க மாட்டார். பிடிவாதம் வேறு, உறுதி வேறு என்பதைப் புரிந்து வைத்திருப்பார்.
ஒரு தலைவருக்கு விடாமுயற்சி அவசியம் தேவை. வெற்றி பெறுவதைவிட விடாமுயற்சி முக்கியமானது. உழைப்புக்கு அஞ்சாதவராக இருப்பார். 

பலம், பலவீனம்
 
தன்னுடைய பலம் எது, பலவீனம் எது என்ற கணிப்பு அவருக்கு இருக்கும். அவருடைய சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றிலும் முரண்பாடு இருக்காது. நேர்மை, நாணயம் இரண்டையும் எந்தக் காலத்திலும் கைவிடாத உறுதி அவரிடம் இருக்கும். இப்படிப்பட்ட குணங்கள் இருந்தால்தான் தன்னால் வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்ற முடியும் என்பதையும் எந்த நிறுவனத்திற்கும் வெளிப்படைத் தன்மை மிக முக்கியம் என்பதையும் அவர் அறிவார். 

தவறு செய்யாதவர் யார்?
 
எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் முன்னேற முடியாது. தவறு செய்துவிடுவோமோ என்று பயந்துகொண்டு சிலர் எதைச் செய்யவும் பயப்படுவார்கள். தவறே செய்யாதவர்கள் இரண்டு பேர்தான், `ஒருவர் இன்னும் பிறக்கவே இல்லை. இன்னொருவர் எந்த வேலையுமே செய்யாதவர், என்பார்கள். 

நேர நிர்வாகம்
 
தான் பேச வேண்டிய கூட்டமானாலும் கேட்க வேண்டிய கூட்டமானாலும் உரிய நேரத்திற்குக் கூட்ட அரங்கில் இருப்பதும் ஒரு தலைமைப் பண்புதான். நேரத்தின் அருமை தெரியாதவர்கள் மற்ற பலருடைய நேரத்தையும் வீணடிப்பார்கள். இரவு படுக்கப்போகு முன் அடுத்த நாளுக்கான திட்டத்தை ஒரு முறை நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்வது சிறப்பானது. 

பேச்சும் எழுத்தும்

 
பேச்சாற்றல் என்றால் அடுக்கு மொழியில் ஆவேசமாகப் பேச வேண்டும் என்பதல்ல. சொல்ல வேண்டிய விஷயங்களை இயல்பாகவும் கோவையாகவும் நடைமுறை உதாரணங்களுடன் சிறிது நகைச்சுவை கலந்து பேசத் தெரிந்தாலே போதுமானது.அதேபோல, உறுப்பினர்களுக்கு அல்லது சக நண்பர்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்க அவ்வப்போது நிறுவனம் நடத்தும் இதழில் அல்லது வெளியிடும் அறிக்கையில் எழுதுவதும் முக்கியம்.
பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டுமே பயிற்சியில் கிடைப்பவைதான்.என்னாலெல்லாம் பேச முடியாது, எழுத முடியாது என்று யாருமே தாழ்வு மனப்பான்மையுடன் ஒதுங்க வேண்டியதில்லை. ஒரு தலைவருக்குப் படைப்பாற்றலும் இருந்து விட்டால், அவரது அனுபவங்கள் அடுத்த தலைமுறையினருக்கு சுவாரஸ்யமான கதைகளாகவோ, கவிதைகளாகவோகூடக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். 

அடுத்த தலைமுறை
 
எந்தத் தலைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழிகாட்டிய பிறகு பொறுப்பிலிருந்து விடுபட வேண்டிய கட்டம் வரும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து, தான் விட்டுச் சென்ற பணியை மேலும் தொடர அடுத்த தலைமுறையினரை அவர் தயார் செய்திருக்க வேண்டும். ஜனநாயக ரீதியிலான செயல்பாடு, மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்குவது, இளைய தலைமுறையினருக்கு பயிற்சியளிப்பது ஆகிய அனைத்துமே தலைமைப் பண்புகளில் சேர்ந்தவைதான்.

 

பலவீனத்தை வெளிக்காட்டலாமா?

பலவீனத்தை வெளிக்காட்டலாமா?

 

 

அஸ்திவாரத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு ஆடம்பரமாக கட்டிடம் எழுப்பினால் எப்படி? தங்கள் ஊழியர்கள் வேறு பல விஷயங்களில் குறைபாடு கொண்டவர்களாக இருந்தால் அவற்றைப் பயிற்சியின் மூலம் சரி செய்துகொள்ளலாம் என நினைக்கும் நிறுவனங்கள் சில அடிப்படை விஷயங்களில் மட்டும் மிகவும் கண்டிப்பாக இருக்க வாய்ப்பு உண்டு.
அடிப்படை விஷயம் என்றால் என்ன? இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம். என்றாலும் இதை விளக்க சைகோமெட்ரிக் தேர்வில் கேட்கப்பட வாய்ப்புள்ள ஒரு கேள்வியை மனிதவளப் பயிற்சி வகுப்பு ஒன்றில் முன்வைத்தேன். 

நடத்தை 

“நீங்கள் ஒரு லீடர். உங்களின் கீழ் பணிபுரியும் ஒருவர் சிறப்பாக வேலை செய்யக் கூடியவர். இப்போது தன் பணியைச் சரியாகவே செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடத்தை சரியில்லை என்று உங்கள் டீமிலுள்ள பலரும் உங்களிடம் புகார் கூறுகிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?’’. 

இப்படி ஒரு கேள்வி கேட்ட அடுத்த நிமிடமே பயிற்சி பெற வந்திருந்த பலவித டீம் லீடர்களுக்கிடையே பலவித பதில்கள் வந்தன. 

‘’அந்த ஊழியரைக் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரிப்பேன்’’ என்றார் ஒருவர்.
‘’கடுமை கூடாது. இதமாக எடுத்துச் சொல்வேன். டீமில் பிறர் நடத்தை சரியில்லை என்றால், அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்பேன். மனம் திருந்துவார்’’ என்றார் அடுத்தவர். 

‘’இதெல்லாம் வேலைக்கு ஆகாது. பிறருடன் கலந்து பழகத் தேவையில்லாதபடி தனி ஒருவராகவே செய்யக்கூடிய வேலையை அவருக்கு அளித்து விடுவேன். அப்போது அவர் மீதிப் பேருடன் கலந்து பழக அவசியமிருக்காது’’ என்றார் இன்னொருவர். 

நான்காமவர் அதற்கு நேரெதிரான ஒரு கருத்தைக் கூறினார். ‘’பிறருடன் சேர்ந்துதான் செய்ய முடியும் எனும் படியான வேலையை அவருக்குக் கொடுக்கலாம். அப்போது தன் வேலையை முடிக்க வேண்டுமென்றால் அவர் பிறரிடம் ஒழுங்காகப் பழக வேண்டும் என்ற அவசியம் தோன்றிவிடும்’’ என்றார். 

‘’இதையெல்லாம் விடுங்க சார். உங்க பயிற்சி வகுப்புக்கு அவரை அனுப்பினாலே போதும். தானாக மாறிடுவார்’’ என்று என்னைக் குளிர்விக்க முயன்றார் வேறொருவர். 

‘’வேலைகூட அப்புறம்தான் சார். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நடத்தைதான் முக்கியம்’’ என்று திருவாய் மலர்ந்தார் இன்னொருவர். 

அப்ஜெக்டிவாக
 
எல்லாமே சிறந்த யோசனைகள்தான் என்பதைக் கூறிவிட்டு, நான் அவர்களை ஒரு கேள்வி கேட்டேன். 

‘’இவை எல்லாவற்றுக்கும் முன்பாக அந்த ஊழியர் மீது மற்றவர்கள் சுமத்தும் புகார் உண்மையானதுதானா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டாமா?’’. 

இப்படி நான் கேட்டதும் ‘அட ஆமாம்’ என்பதுபோல் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர் பயிற்சியாளர்கள். 

ஒரு பிரச்சினையை அப்ஜெக்டிவாகவும் அணுக வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது இந்தச் சம்பவம். 

அப்ஜெக்டிவாக அணுகுவது என்றால் என்ன? சப்ஜெக்டிவாக அணுகுவது என்றால் என்ன? பார்ப்போம். 

அப்ஜெக்டிவ் வகைக் கேள்விகள் உங்களுக்குத் தெரியும். ஒரு கேள்விக்கு மூன்று, நான்கு பதில்களை அளித்திருப்பார்கள். சரியான பதிலைத் தேர்ந்தெடுத்தால் அந்தக் கேள்விக்கான முழு மதிப்பெண் கிடைக்கும். இல்லையேல் பூஜ்ஜியம்தான்.

இருகோணங்களிலுமே
 
நான் ஒரு கட்டுரையை எழுதி மூன்று பேரிடம் மதிப்பிடச் சொன்னால் ஒவ்வொருவரும் வெவ்வேறான மதிப்பெண்ணைத்தான் அளிப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய சப்ஜெக்டிவ் அணுகுமுறை. அதாவது அவர்களது கடந்த கால அனுபவம், எதிர்பார்ப்பு, கட்டுரையின் மையப் பொருள் குறித்த அவர்களது தீர்மானம் போன்றவை மாறுபடுகின்றன. 

வாழ்க்கையில் சிலவற்றை அப்ஜெக்டிவாகவும், சிலவற்றை சப்ஜெக்டிவாகவும் அணுக வேண்டும். சைகோமெட்ரிக் தேர்வுகளில் இருகோணங்களிலுமே யோசித்துவிட்டுதான் விடை அளிக்க வேண்டும். அதற்கு உதவத்தான் இந்தத் தொடர். 

“உங்கள் சிறப்புகள் அல்லது பலங்கள் என்ன?’’.
இப்படி ஒரு கேள்வி சைகோமெட்ரிக் தேர்வுகளிலும் இடம்பெறலாம். நேர்முகத் தேர்விலும் கேட்கப்படலாம். இந்தக் கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஒரு சிறு பட்டியலையே அளிக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் ‘’உங்கள் பலவீனங்கள் என்ன?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டால் நீங்கள் திகைக்கக் கூடாது. 

பாதிக்காத பலவீனம்
 
நம் நடவடிக்கைகளைச் சிறப்பானதாக மாற்றும் நான்கு கட்டங்கள் உண்டு. ஒன்று, குறைகளை அறியாதிருத்தல். இரண்டு, குறைகளை அறிந்தும் அவற்றைச் சரிசெய்யாதிருத்தல். மூன்று, முயற்சிகளின் மூலம் குறைகளைச் சரிசெய்தல். நான்கு, முயற்சிகள் இன்றியே குறைகளின்றி இருத்தல்.
யாருக்குமே சில குறை பாடுகள் இருக்கும். அவற்றை உணர்ந்து கொள்ளவில்லை என்றால், இரண்டாவது கட்டத்தையே அடைய முடியாது. நாம் செய்வதுதான் சரி என்ற அசட்டு எண்ணத்தில் இருப்போம். 

குறைந்தபட்சம் நம் குறைகளை அறிந்து கொண்டால்தான் அவற்றைக் களைய ஓரளவாவது முயற்சி எடுப்போம். 

எனவே, தனது ஊழியர்கள் தங்கள் குறைபாடுகளை, பலவீனங்களை அறிந்திருக்க வேண்டும் என்றுதான் நிறுவனங்கள் எதிர்பார்க்கும். எனவே, பலவீனங்களை சைகோமெட்ரிக் தேர்வுகளில் தெரியப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை மறக்கக் கூடாது. எந்தப் பதவியை அடைய நீங்கள் தேர்வு எழுதுகிறீர்களோ, அந்தப் பதவியில் பணிபுரிய உங்கள் பலவீனம் மிகப் பெரும் தடங்கலாக இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்தால் அதைக் குறிப்பிட்டால் உங்கள் வேலைவாய்ப்பை அது பாதிக்கும். 

வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய ஒரு பதவி என்றால் ’’எனக்கு எதையுமே குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக்கமில்லை’’ என்று உங்கள் பலவீனத்தைக் குறிப்பிட்டால் எப்படி? ‘’நினைத் ததை என்னால தெளிவான வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது’’ என்பது உங்கள் பலவீனமானால் விற்பனை அதிகாரியாக உங்களை
எப்படித் தேர்ந்தெடுப்பார்கள்? ‘’எளிதில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் ஊசலாடுபவன் நான்’’ என்று தங்கள் பலவீனத்தை ஒத்துக் கொள்பவர்களை உயரதிகாரியாகத் தேர்ந்தெடுக்க நிறுவனங்கள் யோசிக்குமா, இல்லையா?
எனவே, தவறான இடத்தில் பலவீனத்தை வெளிக்காட்டுவதே உங்கள் பெரிய பலவீனமாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

Monday, 3 November 2014

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை

 

டா க்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய FORGE YOUR FUTURE ஆங்கில நூலின் பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. கலாமிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த நூல். வெளியீடு: ராஜ்பால் அண்ட் சன்ஸ். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடுகிறது. மொழியாக்கம் மு. சிவலிங்கம். இவர் கலாமின் அக்கினிச் சிறகுகள் நூலை மொழியாக்கம் செய்தவர்.
 
“உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” என நீங்கள் பேசியதைக் கேட்டேன். என் மீது எப்படி நான் நம்பிக்கை கொள்வேன்? குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமைகளும் என்னிடம் இல்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தாது என நினைக்கிறேன். தயவுசெய்து, எனக்கு வழிகாட்டுங்கள்.
 
நண்பரே, உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
வாழ்க்கையின் எந்த ஒரு களத்திலும், தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் எடுத்ததற்கெல்லாம் மன்னிப்புக் கோரியவாறும் ஒருவர் முன்வைக்கும் திட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இதற்கு மாறாக, தெளிவாகப் பேசும் திறனுடன் தலை நிமிர்ந்து, கேள்விகளுக்குத் திட்டவட்டமாகப் பதில் அளித்து, தனக்குத் தெரியாத எதையும் உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பவர் மற்றவரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார். 


வழிநடத்தும் நம்பிக்கை
 
தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் மற்றவர்களிடமும் அவர்கள் தங்கள் ரசிகர்களாக இருந்தாலும், சகாக்கள் அல்லது எஜமானர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர்.
தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும். 

சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். திறன்களில் நாம் நிபுணத்துவம் பெற்று நமக்கு முக்கியமாக உள்ள இந்தத் திறன் தொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது. 

சுயமதிப்பு என்றால்..
 
சுய மதிப்பு குறித்த சிந்தனையுடன் இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து கொள்கிறது. நமது வாழ்க்கை நிகழ்வுகளை நம்மால் சமாளிக்க முடியும், மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நமக்கு உரிமை உள்ளது என்ற அறிதல்தான் பொதுவாகச் சுய மதிப்பு எனக் கருதப்படுகிறது. நற்பண்புகளுடன் நாம் நடந்துகொள்கிறோம், நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கான திறன்படைத்தவர்களாக இருக்கிறோம், நாம் முழு மனதுடன் செயல்படும்போது, நம்மால் போட்டியில் வெல்ல முடியும் என்ற அறிதலிலிருந்தும் சுய மதிப்பு தோன்றுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற உணர்வும் நமது சுய மதிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. 

1957-ம் ஆண்டு. சென்னை தொழில்நுட்பப் பயிலகத்தில் (Madras Institute of Technology) நான், இறுதியாண்டு பயின்ற நேரம். ஒப்படைக்கப்பட்ட வேலையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான அவசர உணர்வை எப்படி உருவாக்கிக்கொள்வது என்ற மிகவும் மதிப்புவாய்ந்த பாடத்தை நான் அப்போது கற்றுக்கொண்டேன். ஒரு திட்டத்துக்காக எனது தலைமையில் ஆறு உறுப்பினர் அணியை எனது ஆசான் பேராசிரியர் நிவாசன் அமைத்திருந்தார். தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தின் ஆரம்பக் கட்ட வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு எங்கள் அணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காற்று இயக்கம் மற்றும் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்குவது எனது பொறுப்பு. 

நீண்ட பட்டியல்
 
எங்கள் அணியின் மற்ற ஐந்து உறுப்பினர்களும் விமானத்தின் உந்துவிசை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், ஏவியானிக்ஸ், இன்ஸ்ட்ருமன்டேஷன் ஆகியவற்றுக்கான வடிவமைப்பை உருவாக்கும் பணியை ஏற்றிருந்தார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த பேராசிரியர் நிவாசன், திட்ட முன்னேற்றம் குறித்து அதிருப்தி அடைந்தார். மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். பல்வேறு வடிவமைப்பாளர்களிடமிருந்து தேவையான தகவல்களை ஒன்றுதிரட்டுவதில் எதிர்கொண்ட சிக்கல்களை நான் நீண்ட பட்டியலிட்டதை எல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. எனது ஐந்து சகாக்களிடமிருந்தும் உள்ளீடுகளை நான் பெற வேண்டியிருந்தது. அவை இல்லாமல், வடிவமைப்புப் பணியைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நான் மேலும் ஒரு மாத அவகாசம் கேட்டேன். பேராசிரியர் நிவாசனோ “இங்கே பார் இளைஞனே, இது வெள்ளிக் கிழமை பிற்பகல் நேரம். கான்ஃபிகரேஷன் வரைபடத்தை (விமானத்தின் அனைத்து அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடம்) என்னிடம் காட்டுவதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தால், கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பேன். திருப்தியாக இல்லாவிட்டால், உன்னுடைய உதவித்தொகை ரத்து செய்யப்படும்” என்று சொல்லிவிட்டார். 

மன அழுத்தம்
 
என் வாழ்க்கையின் பேரதிர்ச்சி என்னை இடியாகத் தாக்கியது. எனது உயிரோட்டமே அந்த உதவித் தொகைதான். அது நிறுத்தப்பட்டுவிட்டால், விடுதியில் என் உணவுக்கான பணத்தைக்கூட என்னால் கொடுக்க முடியாமல் போய்விடும். மூன்று நாள் கெடுவுக்குள் அந்த வேலையை முடிப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை. நானும் எனது அணி உறுப்பினர்களும் எங்களால் முடிந்த அளவுக்குத் தீவிர முனைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தோம். 24 மணி நேரமும் பாடுபட்டோம். இரவு முழுவதும் வரைபலகையிலிருந்து எங்கள் தலைகளை நிமிர்த்தவே இல்லை. உணவையும் உறக்கத்தையும் துறந்தோம். சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் மட்டுமே நான் ஓய்வெடுத்துக்கொண்டேன்.
ஞாயிறு காலை எனது வேலையில் நான் மூழ்கியிருந்தபோது, ஆய்வுக் கூடத்தில் வேறு யாரோ இருப்பதை உணர்ந்தேன். அவர் வேறு யாரும் இல்லை, பேராசிரியர் நிவாசன் தான். அமைதியாக அவர் என்னுடைய முன்னேற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனது வேலையைப் பார்த்த பிறகு, பாசத்துடன் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். “ஒரு நெருக்கடியான கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சொல்லி உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால், இந்தத் திட்டத்தை உங்களை முடிக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார். 

மேலும் ஒரு மாதம் இருட்டில் நாங்கள் துழாவிக் கொண்டிருப்பதற்கு இடம் தராமல், அடுத்த மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனப் பேராசிரியர் நிவாசன் தெள்ளத் தெளிவாகக் கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு என்ற நிர்ப்பந்தம்தான், கடந்த சில மாதங்களாக எங்களுக்குப் போக்குக் காட்டி வெற்றியை நோக்கி எங்களை விரைவாகப் பயணிக்க வைத்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய தொடர்கட்டங்களில், நான் பொறுப்பேற்றிருந்த பணியில் அடிப்படைத் தகுதியை மேம்படுத்திக்கொண்டேன். அணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான மென் திறன்களையும் வளர்த்துக்கொண்டேன். 

நான்கு படிநிலைகள்
 
இந்த அனுபவம் தரும் செய்தி என்ன? பின்வரும் நான்கு படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. முதலாவது, உங்களுடைய இலக்கை வரையறுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது, அந்த இலக்கை எட்டுவதற்குக் களம் இறங்குங்கள். மூன்றாவது, இலக்கை நோக்கி விரைந்து முன்னேறுங்கள். நான்காவது, உழைப்பு; உழைப்பு; உழைப்பு.
உங்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயலாக அமையக்கூடியது, இலக்கை நிர்ணயித்துக்கொள்வதுதான். உங்களை மிகவும் ஈர்க்கும் ஒரு துறையில் உங்களுக்கான இலக்கை முடிவு செய்துகொண்டு, அந்த இலக்கை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுங்கள். இது, ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் வெற்றிகளைக் குவிப்பதற்கு உந்துசக்தியாக அமையும். மற்றவர்களுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நம்பிக்கையையும்கூட நீங்கள் பெறுவீர்கள்.

 

Wednesday, 15 October 2014

மனிதருக்குள் எத்தனை மனிதர்கள்?

மனிதருக்குள் எத்தனை மனிதர்கள்?


மதுரைக்குப் பக்கத்துல இருக்கிற அம்மாபட்டிங்கிற ஒரு கிராமத்துக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு காலேஜுக்குப் போகணும். காலேஜுல வண்டி அனுப்பறதாச் சொல்லி இருந்தாங்க. ஆனா, திடீர்னு டிரைவர் போன் பண்ணி “சார் மன்னிச்சுக்குங்க. வண்டி பஞ்சர் ஆயிடுச்சி” ன்னு கெஞ்சினாரு. நான் “பரவாயில்லைபா, எப்படியாவது வந்துடறேன்னு” சொல்லிட்டேன். ஏதாவது டாக்ஸி கிடைக்குதான்னு பாத்தேன். அந்த காலேஜ் கிட்ட போற ஒரு டவுன் பஸ்ஸைப் பிடிச்சேன்.
ஏறினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது அது கிட்டத்தட்ட “மெட்ராஸ் டு பாண்டிச் சேரி” படத்துல வர பஸ் மாதிரின்னு. “ஹாரனை” தவிர மத்த எல்லா “பார்ட்ஸ்” லேந்தும் சத்தம் வந்தது. பஸ்சில் உள்ளவர் களை நோட்டம் விட்டேன். நல்ல கூட்டம்.
பலவகை பர்சனாலிட்டிகள்
கடமை கண்ணாயிரமாக ஒருவர் ஏறினார். கண்டக்டர் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும் எல்லாரையும் தள்ளிவிட்டு போய் கரெக்டா டிக்கெட் வாங்கினார். சில்லறையை கரெக்டா கொடுத்து, கண்டக்டர்கிட்ட பாராட்டுப் பத்திரமும் வாங்கினார். யாரையும் தொந்தரவு பண்ணாத இடமாக ஒதுங்கி நின்று கொண்டார். யாராவது டிக்கெட் பாஸ் பண்ணா உதவி செய்தார். கடமை தவறாத ஒரு பர்சனாலிட்டி.
பக்கத்துல இன்னொருத்தர் பஸ்ஸுக்கே கேக்கிற மாதிரி மொபைல்ல பேசிகிட்டே இருந்தார். கண்டக்டர் சொன்னதைக் காதால மட்டும் கேட்டுகிட்டே இருந்தார். எவ்வளவு பைசா அவர் கேட்டாரோ அதைக் கொடுத்தார். பஸ் அங்க நிக்காது சார் என்று சொன்னாக் கூட ஓகேன்னு சொன்னார்.
ஆனால், லேடிஸ் சீட் பக்கம் நிக்காதிங்க சார்னு சொன்னா அதைக் காதுல வாங்கிக்கலை. அவருடைய மூளை வேற எதையோ யோசிச்சிகிட்டே இருந்தது. இவர் ஒரு மிஷின் மாதிரி.
“ஏம்பா தம்பி, வயசானவங்க நிக்கிறாங்க இல்ல. கொஞ்சம் எழுந்து இடம் உடுப்பா ராஜா” ன்னு ஒரு பையனை எழுப்பி தாய்க்குலத்தின் தலைமகனா நடந்துகிட்டார் ஒருவர். தனக்கு உட்காரச் சீட் கிடைச்ச உடனே பக்கத்தில வெயிட்டை வச்சிக்கிட்டு நிக்கிறவர்கிட்ட “கொடுங்க சார் நான் வச்சிக்கிறேன்” னு அவரே பொருளைக் கேட்டு வாங்கி வச்சிகிட்டார். “கிடைச்ச நேரத்துல தன்னால முடிஞ்ச உதவியைச் செய்யறவர் இவர், உதவி செய்கிற ஒரு பர்சனாலிட்டி.
“சார் கொஞ்சம் தள்ளிக்கறிங்களா. என் ப்ரெண்ட்கிட்ட போகணும்” குரல் கேட்டுத் திரும்பினேன். ஒரு லேடி உள்ள வந்தாங்க. ப்ரெண்டைப் பாத்துட்டாங்க. “ஏய் உன் சாரி கலர் நல்லா இருக்கு இல்ல, டிசைன் புதுசா? மயிலறகாடி இது? அந்தத் தலைப்புல இருக்கிற ரோஜாப்பு லோட்டஸ் மாதிரி தெரியுது. நான்கூட இந்த நகை வாங்கினேன்”. இது யாரு உன் பொண்ணா? இந்த கவுன் சாரிலேந்து தெச்சதா? இப்படி அவங்க கண்ணுக்குத் தெரியற எல்லா விஷயத்தையும் ஒரு கலை நயத்தோட பாத்தாங்க. சரிதான். ஒரு ஆர்டிஸ்டிக் பர்சனாலிட்டி.
பஸ் வேற என்னை கைப் பிடிச்சி நடத்தி கூட்டிக்கிட்டுப் போற மாதிரியே ஒரு பீலிங். சைக்கிள்ல்லாம் வேற அதை ஓவர்டேக் பண்ணிக்கிட்டுப் போகுது. “கடவுளே என்னை எப்படியாவது கொண்டு போய் காலேஜ்ல சேத்துருப்பான்னு வேண்டிக் கிறதுக்குள்ள, ஒரு குமுறல் கேட்டது.
“என்ன சார் இல்ல நம்ம நாட்டுல? நம்மதான் குறை சொல்லிக்கிட்டே இருக்கோம். வளர்ச்சிப் பணிகள் நிறைய நடந்துகிட்டு தான் இருக்கு. நாம் தான் அதை ஒட்டி வளர்ந்துகிட்டே போகணும். நமக்கு ஒண்னு தெரியலன்னா மற்றதைக் குறை சொல்லக் கூடாது. புதுக் கொள்கையும் கோட்பாடும் வேணும் சார்”ன்னு தன் பக்கத்தில இருந்தவர் கிட்ட பேசிகிட்டு இருந்தார். அவரும் “எதுக்கும் ஆமாம்னு சொல்லிடுவோம். இல்லன்னா அடிச்சிடுவார்னு பயந்தோ என்னவோ ஆமாம் ஆமாம்ன்னு புரிஞ்ச மாதிரி தலையாட்டிகிட்டே இருந்தாரு. ஏன் புரிஞ்ச மாதிரின்னு சொல்லனும். நிஜம்தான்னு கூட அவர் நினைச்சிருக்கலாம்.. உடனே என் பக்கத்தில நின்ற கொஞ்சம் படிச்சவர் சார். இவரு எங்க உறவு. கொஞ்சம் “ஐடிய லிஸ்டிக்” ஆளு. எங்க வீட்டுல கூட இப்படிப் பேசிகிட்டே இருப்பார்னு சொன்னாரு.
நான் அப்படியான்னு தலையாட்டி முடிக்கிறதுக்குள்ள, “பஸ்ல இடி விழுந்த மாதிரி ஒரு சத்தம். வேற ஒன்ணும் இல்ல. டிரைவர் “சடன் பிரேக்” போட்டாரு. போட்டதுதான் தாமதம். அட்வைஸ் ஒன்னு பறந்து வந்தது. “என்ன பிரேக் ஓபன் ஆகிடுச்சி.? க்ளட்ச் ஒங்க கண்ட்ரோல்ல இல்லியா. “ரஸ்ட்” ஆகியிருக்கும் சார். . கண்ணாடி ஆங்கிள் சரியாய் இல்ல பாருங்க. டிரைவர். “ப்ரெண்ட் மிர்ரர் கூட கலரிங் சரியில்லை. . பஸ்சையே உருவாக்கினவர் போல் பேசினார்.
டிரைவர் சிரிச்சுகிட்டே “ஒரு பிரேக் போட்டதுக்கே இவ்வளோ கிளாஸ் எடுத்திங்க. நல்ல வேளை வண்டி ஓடாம நிக்கலை. நின்னிருந்தா எனக்கும் இங்க எல்லாருக்கும் ஒரு சயன்டிஸ்ட் மாதிரி கிளாஸ் எடுத்திருப்பீங்க”னு சொல்லிகிட்டே வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
எத்தனை விதமான மனிதர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பர்சனாலிட்டி. இன்னும் பல மனிதர்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. வாருங்கள் பயணிப்போம். 

 

தொடர்புக்கு : sriramva@goripe.com

Saturday, 4 October 2014

காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி

காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி 

 
 
காமராஜர் மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975
தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது! 
 
அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்! 

அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் முதுகலைப் படிப்பு முடிக்கும்வரை கல்விக் கட்டணம் என்று எதுவும் செலுத்தியதில்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கல்வி விதி-92ன்படி கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தேன். 

எல்லோரும் கொண்டுவருவோம்!
 
இப்போது சத்துணவுத் திட்டம் இருப்பதுபோல அப்போது பள்ளிகளில் ஒரு வகை மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. மாணவர்களையும் சமுதாயத்தையும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கச் செய்த முறை அபாரமானது. தொடக்கப் பள்ளியில் வகுப்புக்கு ஒரு உண்டியல் வைத்து அன்றாடம் மாணவர்கள் அதில் சில்லறைக் காசு சேர்ப்போம். வகுப்புகளுக்குள் இதில் போட்டி உண்டு. பள்ளியில் கூட்டுவழிபாடு முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டிலிருந்து அன்றைக்குக் கொண்டுவந்த காய்கனி, தேங்காய் போன்றவற்றை மிகவும் சிலாகித்துச் சொல்லி ஒரு ஆசிரியர் ஏலம் விடுவார். இங்கிலாந்தில் இப்படி ஒரு நடைமுறை (ப்ரிங்க் அண்ட் பை) இருந்ததாக பின்நாட்களில் தெரிந்துகொண்டேன். தை மாத விடுமுறை நாட்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, நெல்லாகக்கூட மாணவர்கள் நிதி வசூலித்துவருவோம். அட்டைகளின் கட்டங்களில் கையொப்பமிடுபவர்களிடம் கட்டத்துக்கு நான்கணா வீதத்தில் பெற்றுவருவோம். 

எங்கள் அப்பச்சி 
 
1968-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். கிறிஸ்துமஸ் விழாக் காலம். காமராஜர், நாகர்கோவில் தொகுதி நாடாளு மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவருக்காகப் பிரச்சாரம் செய்ய நானும் சில மாணவர்களுடன் திங்கள்சந்தை என்ற ஊரில் தங்கியிருந்தேன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் மத்தையசுக்கு ஆதரவாக காரைக்குடி சா. கணேசன் பேசும்போது காமராஜரைக் குறிப்பிட்டு, “ உள்ளூர் சந்தையில் விலைபோகவில்லை, வெளியூருக்கு வந்திருக்கிறது” என்பார். அதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு நடந்த விருதுநகர் தேர்தலில் காமராஜர் வெற்றிபெறவில்லை என்பதை அவர் அப்படிக் குறிப்பிட்டார். ஆனால், காமராஜருக்கு நாகர் கோவில் வெளியூரல்ல என்பதை நாங்கள் பிரச் சாரத்தின்போது கண்டோம். சென்ற கிராமங்களில் எல்லாம் மக்கள் ஊருக்கு வெளியே வந்து எங்களை வரவேற்று, “எங்க அப்பச்சிக்கா நீங்க ஓட்டு கேக்க வரணும்?”, “எங்க தாத்தாவுக்கு நாங்க ஓட்டு போட மாட்டோமா?” என்றெல்லாம் கேட்பார்கள். மரத்தடியில் விசுப்பலகையில் எங்களை உட்காரவைத்துப் பதநீர் கொடுத்து உபசரிப்பார்களே தவிர, வாக்கு கேட்க விட மாட்டார்கள். இவ்வளவு செல்வாக்குடன் இருந்தாலும், தனக்குப் பிரச்சாரம் செய்ய வந்துகொண்டேயிருந்த பெருங்கூட்டத்தில் யாரெல்லாம் பேசினால் தனக்குப் பாதகமாகும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். 

தலையணையின் கீழ் ரூ. 160 
 
தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அவரால் பெயரிட்டு அழைக்க முடியும். நல்லதானாலும், கெட்ட தானாலும் அவர்களுடன் பங்கேற்க அவர் தயங்கு வதில்லை. சுதந்திரம் அடைந்தால்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று இருந்த தொண்டர்களுள் எனது மாமனாரும் ஒருவர். அவரது திருமணத்தின்போது காமராஜருக்குக் கடுமையான பல்வலி. அதைப் பொருட்படுத்தாமல், முகத்தோடு தலையையும் ஒரு துண்டால் போர்த்திக்கொண்டு திருவல்லிக்கேணியில் நடந்த திருமணத்துக்கு வந்து, இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்ததாகக் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல், சிரமப்படுகிறவர்களுக்கு அவர்கள் கேட்குமுன் கொடுப்பது அவர் வழக்கம். இத்தனைக்கும் தன் கையில் ஒரு சல்லிக் காசுகூட அவர் வைத்துக்கொள்வதில்லை. ‘அவர் இறந்தபோது அவருடைய தலையணைக்குக் கீழே 160 ரூபாய் ஒரு காகித உறையில் இருந்தது’ என்று அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அது ஒன்றும் கட்டுக்கதையல்ல. காமராஜரைப் பற்றிச் சொல்லப்படும் இதுபோன்ற விஷயங்கள் கட்டுக்கதை போன்று நமக்குத் தோன்றுவதற்குக் காரணமே, தற்போதைய அரசியல்வாதிகளின் ‘எளிமையான’ வாழ்க்கைமுறைதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 

எதிர்கொள்வது, வெற்றிகாண்பது! 
 
பிரச்சினைகளுடன் சமாதானம் செய்துகொள்வது அவருக்குப் பழக்கமில்லை. அரசியலானாலும் நிர்வாக மானாலும் உள்கட்சிப் பூசலானாலும் எதிர்கொண்டு சந்திப்பார். பிரச்சினை என்று வந்துவிட்டால், அதைத் தீர்க்கும்வரை அவர் தூங்குவதில்லை. இப்படி விடாப்பிடியாக இருப்பவர்கள் அரசியலில் வெற்றி காண்பது அரிது. ஆனால், காமராஜர் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார். அன்றைய மத்திய உள்துறை அமைச் சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி தலைமையில், காமராஜரைப் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், “காமராஜரின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பிரச்சினைகளை எதிர்கொள்வது, வெற்றிகாண்பது என்று கூறிவிடலாம்” என்றார். காமராஜரின் தன்னம்பிக்கையும் துணிவும் நிகரற்றவை. 

சுட்டது, விட்டோம் என்று கையை உதறிவிடுவது அவர் வழக்கமல்ல. தீர்வே இல்லை என்றிருந்த தமிழ்நாட்டு நெசவாளர் பிரச்சினைக்கு, நூல் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்செய்து, தீர்வுக்கு முயற்சி செய்தார். இதற்காக அப்போது ஐந்தரை லட்சம் ரேஷன் அட்டைகள் இருந்தனவாம். நெசவாளர்கள் பட்டினி கிடந்தபோது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உண வளிப்பதில் பிடிவாதமாகச் செயல்பட்டார். 

‘தி இந்து’ பாராட்டிய காமராஜரின் ஆங்கிலம்
காலணா பத்திரிகையான ‘ஜெயபாரதம்’முதல் ‘தினச் செய்தி’, ‘காங்கிரஸ் செய்தி’, பின்னர் ‘நவசக்தி’வரை இத்தனை பத்திரிகைகளும் அவர் பராமரிப்பில் நடை பெற்றவையே. அவரைப் படிக்காத மேதை என்று சொல்வது உயர்வுநவிற்சி கருதிச் சொல்வதாகத்தான் இருக்க வேண்டும். அவர் நிறையப் படித்தார். அன்றாடம் எல்லா தினசரிகளையும் படித்துவிடுவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமமாகவே சரளமாகப் பேசக் கூடியவர். 1969-ல் ஒருமுறை அவரது வீட்டு மாடி அறையில் அவரைச் சந்தித்தேன். ஒற்றைக் கட்டில்; அருகே சில கதர் வேட்டிகளும் சட்டைகளும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராக்கைகளில், அறையின் ஒரு சுவர்ப் பரப்பு முழுவதும் தமிழ், ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தன. நாடாளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை ஒருமுறை ‘தி இந்து’ நாளிதழ் ‘காமராஜர் மாசில்லாத ஆங்கிலத்தில் உரையாற்றினார்’ என்று விவரித்திருந்தது. 

எனக்குத் தெரியும், உட்கார்! 
 
நல்ல உயரம். களையான முகத்தில் தீட்சண்யமான, புடைபரந்த கண்களோடு கம்பீரமாக இருப்பார். தேனாம் பேட்டை மைதானக் கூட்டமொன்றில், தமிழ்நாடு காங் கிரஸ் தலைவராக கக்கனை காமராஜர் அறிவித்தார். கூட்டத்தின் பின் பகுதியிலிருந்து மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி ஒரு சலசலப்பு. “எனக்குத் தெரியும், உட்கார்” என்று அவர்களை அமர்த்தினார். பார்ப்பவர்கள் அவரது கம்பீரத்துக்கு அடிபணியாமல் இருக்க முடியாது. மேடைப் பேச்சிலும் நெஞ்சைத் தொடும் உண்மையின் தொனியும், அந்த உண்மை மட்டுமே கோத்துத்தரும் சொற்களின் அழகும் அவரது பேச்சைக் கேட்டவர்களின் அனுபவம். 

காமராஜர், இரவில் வெகுநேரம் கழித்தே தூங்கு வார். மாம்பலம் டாக்டர் சவுரிராஜன், தலைச்சேரி தாமோதரன் இவர்களோடு காமராஜர் எலியட்ஸ் கடற்கரையில் இரவில் வெகு நேரம் அரசியல் அலசிய பிறகு வீட்டுக்குச் செல்வார். ஒரு நாளைக்கு இரு வேளை நீராடி உடை மாற்றுவது அவரது வழக்கம். அசைவ உணவுகளில் பிரியம் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்பர்கள் கோயில் பிரசாதம் கொடுத்தால் அணிந்துகொள்வது தவிர அவராகவே சாமி கும்பிட்டுப் பார்த்ததில்லை என்பார்கள். 1972-ல் விலைவாசி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றைத் தமிழகம் முழுவதும் காமராஜர் தீவிரமாக நடத்திக்காட்டினார். இறுதிவரை இந்திரா காந்தியுடன் அவர் சமரசம் செய்துகொள்ளவேயில்லை. அவ்வளவு தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டிருந்த காமராஜர் அதற்கு எப்படிச் சம்மதிப்பார்? 

- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com